vishnuchittan

Wednesday, December 28, 2005

மன்னு குறுங்குடியாய் 2


தகக மரத்தின் தாழ் சினையேறித் தாய் வாயில்
கொக்கின் பிள்ளை வெள்ளிரையுண்னும் குறுங்குடியே.

இன்னும் பறக்கத்தெரியாததால் ஒரு தாழ்ந்த கிளையில் ஏறி இருந்து கொண்டு கொக்கின் குஞ்சு தன் தாயின் வாயில் இருந்து இரையுண்னும் குறுங்குடி என்கிறார் திருமங்கையாழ்வார்.

இந்தத் திருக்குறுங்குடியின் கோபுரத்தின் வெளி இடப்புறத்தில் இந்த கோவர்த்தனதாரியான க்ருஷ்ணனின் புடைப்புச் சிற்பம் அமைந்துள்ளது.


இந்திர னுக்கென் றாயர்க ளெடுத்த
எழில்விழ வில்பழ நடைசெய்,
மந்திர விதியில் பூசனை பெறாது
மழைபொழிந் திடத்தளர்ந்து, ஆயர்
எந்தமோ டினவா நிரைதள ராமல்
எம்பெரு மானரு ளென்ன,
அந்தமில் வரையால் மழைதடுத் தானை

வழக்கமாகத் தனக்கு பெரிய விழாவாக எடுத்து மிகவும் சிறப்பான உணவு வகைகளைப் படைக்கும் ஆயர்கள், கண்ணனின் ஆலோசனையின் பெரில் அவர்களின் பசு மாடுகள் மற்றும் கன்றுகளுக்கு புல் மற்றும் தீவனங்களை அளிக்கும் கோவர்த்தன மலைக்கு அவற்றைப் படைத்து விடுகிறார்கள். இதனால் மிகவும் கோபம் அடைந்த இந்திரன் ஆயர்பாடியில் ஏழு நாட்கள் விடாமல் கடும் மழையைப் பொழிவிக்கிறான். தன்னை சரணடைந்த ஆயர்களையும் அவர்களது பசுக்களையும், கண்ணன் கோவர்த்தன மலையைப் பெயர்த்து எடுத்து ஒரு குடையாகப் பிடித்து அந்த ஏழு நாட்களும் காப்பாற்றுகிறான். அதற்கு மேல் பொழிவதற்கு மழை இல்லாமல் வற்றி தன் தவறை உணர்ந்து இந்திரன் கண்ணனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு கண்னனுக்கு காமதேனுவின் பாலால் அபிஷேகம் செய்து "கோவிந்தன்" ( பசுக்களின் காவலன்) என்ற பெயர் சூட்டி பட்டாபிஷேகம் செய்து விட்டு இந்திரலோகம் செல்கிறான்.

இதை பெரியாழ்வார்

குன்றினால் குடை கவித்ததும்

என்றும்

மேலையமரர் பதி மிக்கு வெகுண்டு வர
காளநன் மேகமவை கல்லொடு கால் பொழிய
கருதி வரை குடையாக் காலிகள் காப்பவனே

என்றும் போற்றுகிறார்.

ஆண்டாளும்

குன்று குடையாயெடுத்தாய் குணம் போற்றி

என்று ஆயர்களுக்காக அவன் காண்பித்த சௌலப்ய குணத்திற்கு பல்லாண்டு பாடுகிறாள்.

திருமங்கையாழ்வார்

அன்னதோர் பூதமாய் ஆயர் விழவின் கண்
துன்னு சகடத்தால் புக்க பெருஞ்சோற்றை
முன்னிருந்து முற்றத்தான் துற்றிய தெற்றெனவும்

என்று தானே ஒரு பூத வடிவு கொண்டு பெரிய வண்டிகள் மூலம் கொண்டு வரப் பட்ட மிகுதியான சோற்றை கண்ணனே உண்டதாகச் சொல்கிறார்.

இதைப் பெரியாழ்வார் கூறும் பொழுது

அட்டுக்குவி சோற்றுப் பருப்பதமும்
தயிர் வாவியும் நெய்யளறுமடங்கப்
பொட்டத்துற்றி மாரிப் பகை புணர்த்த
பொருமா கடல் வண்னன்

சமைத்து மலை போல் குவிக்கப்பட்ட சோற்றையும் தயிர்க் குளத்தையும் நெய்யாகிய சேற்றையும் முழுவதும் உண்டு மழை தடுத்த கடல் நிறத்தவனாகிய கண்ணன் என்கிறார்.

இதையே ந்ம்மாழ்வாரும்

உன்ண வானவர் கோனுக்கு
ஆயர் ஒருப்படுத்தவடிசிலுண்டலும்
வண்ண மால் வரையெடுத்து
மழை காத்ததும்

என்கிறார்.

பெரியாழ்வார் இங்கு கண்ணனை மட்டுமில்லாது அவன் எடுத்த கோவர்த்தன மலையையும் பத்து பாடல்களால் கொண்டாடுகிறார்
.

இழவுதரியாததோர் ஈற்றுப்பிடி
இளஞ்சீயம் தொடர்ந்து முடுக்குதலும்
குழவியிடைக் காலிட்டெதிர்ந்து பொரும்

கோவர்த்தனமென்னும் கொற்றக்குடையே

அப்பொழுதுதான் ஈன்ற தன் கன்றை தன் கால்களின் நடுவில் விட்டுக் காத்துக்கொண்டு தன்னைத் தொடர்ந்து எதிர்க்கும் சிங்கத்துடன் போரிடும் பெண் யானையை உடைய கோவர்த்தன மலையென்றும்

கானக்களியானை தன் கொம்பிழந்து
கதுவாய்மதஞ்சோரத் தன்கையெடுத்து
கூனற்பிறை வேண்டியண்ணாந்து நிற்கும்
கோவர்த்தனமென்னும் கொற்றக்குடையே

தன் த்ந்தத்தை இழந்த யானை வானத்தில் தோன்றிய பிறைச்சந்திரனை தன் தந்தமென்று நினைத்து அதைப் பிடிக்க அன்ணாந்து பார்க்கும் கோவர்த்தன மலையென்றும்

அடங்கச்சென்றிலங்கையையீடழித்த
அநுமன் புகழ் பாடித் தன் குட்டன்களை
குடங்கைக் கொண்டு மந்திகள் கண் வளர்த்தும்
கோவர்த்தனமென்னும் கொற்றக்குடையே


மனிதர்கள் தன் முன்னோர்கள் மற்றும் பல புகழ் பெற்ற மனிதர்களின் கதைகளைக் கூறி தங்கள் குழந்தைகளை உறங்க வைப்பதுபோல் கொவர்தன மலையில் உள்ள குரங்குகள் தங்கள் முன்னோனான அநுமனின் புகழ் பாடித் தம் குட்டிகளை தங்கள் தோள்களில் போட்டு உறங்க வைக்கின்றன என்றும்

முன்பே வழி காட்ட முசுக்கணங்கள்
முதுகிற்பெய்து தம்முடைக் குட்டன்களை
கொம்பேற்றியிருந்து குதிபயிற்றும்
கோவர்த்தனமென்னும் கொற்றக்குடையே

குரங்குகள் தம் குட்டிகளைத் தம் முதுகில் சுமந்து சென்று மேற்கிளையில் கொண்டு விட்டு அவற்றிற்கு குதிப்பதற்கு பயிற்சியளிக்கும் கோவர்த்தன மலை என்றும் கொண்டாடுகிறார்.

மேலும் பெரியாழ்வார்

கண்ணன் கோவர்த்தன மலையை யெடுத்துப் பிடித்து நின்றது

வானத்துலுள்ளீர் வலியீருள்ளீரேல்
அறையோ வந்து வாங்குமினென்பவன் போல்

வானத்திலுள்ளவர்கள் யாராவது பலமுள்ளவர்கள் இருந்தால் இந்த மலையை வந்து பறித்துக் கொண்டு போகலாம் என்று அறை கூவி நிற்பது போன்று இருக்கிறது என்கிறார்.

மேலும்

படங்கள் பலவுமுடைப் பாம்பரையன்
படர் பூமியைத்தாங்கிக் கிடப்பவன் போல்
தடங்கை விரலைந்தும் மலரவைத்துத்
தாமோதரன் தாங்கு தடவரை

என்று பல தலைகளையுடைய ஆதிசேஷன் பூமியைத்தாங்கிக் கிடப்பது போல் தன் விரல்கள் அனைத்தையும் கொண்டு கண்ணன் கோவர்த்தன மலையைத் தாங்கி நின்றதாகக் கூறுகிறார்.

கொடியேறு செந்தாமரைகைவிரல்கள்
கோலமுமழிந்தில வாடிற்றில
வடிவேறு திருவுகிர் நொந்துமில
மணிவண்ணன் மலையுமோர் சம்பிரதம்

கண்ணன் மலையையெடுத்த பொழுது அவனுடைய தாமரை போன்ற விரல்கள் சிறிது கூட வாடவில்லை, நகங்கள் கூட வலிக்கவில்லை அவன் மலையையெடுத்தது ஒரு சம்ப்ரதாயம்; ஒரு பாசாங்கு என்கிறார் பெரியாழ்வார்.

இதையே ஸ்ரீபாகவதம் இவ்வாறு கூறுகிறது.

tasmân mac-charanam goshthham
man-nâtham mat-parigraham
gopâye svâtma-yogena
so 'yam me vrata âhitah

tasmât - therefore; mat-s'aranam - having taken shelter of Me; goshthham - the cowherd community; mat-nâtham - who have Me as their master; mat- parigraham - My own family; gopâye - I shall protect; sva-âtma-yogena - by My personal mystic power; sah ayam - this; me - by Me; vratah - vow; âhitah - has been taken.

TRANSLATION

I must therefore protect the cowherd community by My transcendental potency, for I am their shelter, I am their master, and indeed they are My own family. After all, I have taken a vow to protect My devotees.

ity uktvaikena hastena
kritvâ govardhanâcalam
dadhâra lîlayâ vishnus'
chatrâkam iva bâlakah

iti - thus; uktvâ - having spoken; ekena - with one; hastena - hand; kritvâ - taking; govardhana-acalam - Govardhana Hill; dadhâra - He held it; lîlayâ - very easily; vishnuh - Lord Vishnu; chatrâkam - a mushroom; iva - just as; bâlakah - a child.

TRANSLATION
Having said this, Lord Krishna, who is Vishnu Himself, picked up Govardhana Hill with one hand and held it aloft just as easily as a child holds up a mushroom
.

என்று கண்ணன் மலையை எடுத்தது ஒரு சிறு குழந்தை ஒரு கையால் ஒரு காளானை எடுத்து நின்றாற் போல் இருந்தது என்று.

ஏன் கண்ணன் கல்லையெடுத்துக் கல் மாரி காத்தான் என்றால், இந்திரன் கல் மாரி பெய்ததால். அவன் கடல் மாரி பொழிந்திருந்தால் கண்ணன் கடலெடுத்துக் கடல் மாரி காதிருப்பான் என்று பராசர பட்டர் என்ற வைணவ ஆச்சாரியர் திருமங்கையாழ்வாரின் 'கல்லெடுத்துக் கல் மாரிகாத்தாய் என்றும்' என்ற திருநெடுந்தாண்டக பாசுரத்திற்கு உபன்யாசம் செய்யும் பொழுது கன்ணனின் அளவு கடந்த சாமர்த்தியத்தைப் போற்றுகிறார்.

சரி! கண்ணன் தன்னுடைய அடியவர்களான ஆயர்கள் மற்றும் பசுக்களுக்குத் துன்பம் விளைவித்த இந்திரனைத் ஏன் தண்டிக்கவில்லை என்றால் இந்திரன் செய்த செயல் அவனது பசிக் கொடுமையினால் விளைந்தது. எனவேதான் கண்னன் அவனைத் தண்டிக்கவில்லை என்று பராசர பட்டர் என்ற உரையாசிரியர் கூறுகிறார்.

மேலே உள்ள கோவர்த்தன கிரிதாரியின் புடைப்புச் சிற்பம் மேலே சொன்ன முழு கதையையும் கண் முன் நிறுத்துவதாக இருக்கிறது. கண்ணன், ஆயர்கள், பசுக்கள், கோவர்தன மலை, மலை மேல் மிருகங்கள், முனிவர்கள் அனைத்தும் மிக அழகாக செதுக்கப் பட்டிருக்கிறது. கன்ணன் பசுவிற்கு ஒரு கையால் புல் கொடுத்துக் கொண்டிருக்கும் அழகே அழகு.

Wednesday, December 21, 2005

மன்னுகுறுங்குடியாய் 1


சொல்லில் திருவேயனையார் கனிவாய் எயிறொப்பான்
கொல்லை முல்லை மெல்லரும்பீனும் குறுங்குடியே.

திருக்குறுங்குடியிலுள்ள அழகிய பெண்களின் பற்கள் போன்று அவ்வூரின் தோட்டங்களில் முல்லைப்பூக்கள் மலர்ந்திருகின்றன என்று கொண்டாடுகிறார்
திருமங்கையாழ்வார். இங்கு உவமான உவமேயங்கள் அழகாக மாற்றிச்சொல்லப்பட்டிருக்கின்றன. இங்குள்ள பெண்களின் பற்கள் முல்லைப்பூக்கள் போன்று இருக்கின்றன என்று சொல்வதற்குப் பதில் இவ்வூர்ப் பெண்களின் பற்கள் போன்று முல்லைப்பூக்கள் மலர்ந்திருகின்றன என்று நயமாகக் கூறுகிறார்.

இவ்வூரின் கோபுரத்தில் உள்ள புடைப்புச் சிற்பங்களுள் இடது வெளிப்புறத்தில் மேலே உள்ள திருவிக்கிரமனின் அழகிய சிற்பம் அமைந்துள்ளது.

முன்னொரு காலத்தில் பிரஹலாதனின் பேரனான மஹாபலி என்ற அசுரன் இந்திரனை வென்று அவனுடைய இந்திர லோகத்தை தன்வசப்படுத்தி மூவுலகையும் ஆண்டு வந்தான். பிறவியிலேயே மிக நல்லவனான இவன் மிகுந்த தான தர்மங்களையும் செய்து வந்தவன். பதவியையும் நாட்டையும் இழந்த இந்திரன் பகவான் விஷ்ணுவிடம் முறையிட அவன் வேண்டு கோளுக்கு இரங்கி விஷ்ணு ஒரு சிறிய அந்தணன் வடிவம் எடுத்து மஹபலியிடம் யாசகம் (தர்மம்) கேட்கச் செல்கிறான்.

விஷ்ணு வாமனனாக காச்யப முனிவருக்கும் அதிதி தேவிக்கும் மகனாக உதித்ததை கம்பன் கூறும் பொழுது

காலம் நுனித்துணர் காச்யபனுக்கும்
வால் அதிதிக்கும் ஓர் மகவாக
நீலநிறத்து நெடுந்தகை வந்து
ஆலமர் வித்தின் அருங்குறளானான்

ஒரு பெரிய ஆலமரத்தையே தன்னுள் அடக்கியிருக்கும் ஆலம் விதை போன்று நீலநிறத்து நெடுந்தகையான பகவான் ஒரு சிறு பாலகனாக அவதாரம் செய்தான் என்கிறார். அதாவது இந்த வாமனன் பின்பு பெரிய உருவங்கொண்ட திருவிக்கிரமனாக வளரப்போகிறான் என்பதை குறிப்பால் உண்ர்த்துகிறார்.

இந்த இடத்தில் அதிவீரராம பாண்டியரின் வெற்றிவேற்கை வரிகள் நினைவுக்கு வருகிறது.

தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை
தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே ஆயினும்
அண்ணல் யானை அணிதேர் புரவி
ஆட்பெரும் படையொடு
மன்னர்க் கிருக்க நிழலா கும்மே.

அதாவது மீன் முட்டையை விடச் சிறியதாக இருக்கும் ஆலமரத்தின் விதையானது மரமாக வளர்ந்தபின் மிகப்பெரிய யானை, தேர், குதிரை மற்றும் காலாட்படைகளோடு மன்னர்கள் தங்கும் அளவு நிழல் கொடுக்கும். ஒரு சிறு விதை ஒரு மரத்தையே தன்னுள் அடக்கியிருக்கிறது என்று பொருள்.

வந்த வாமனன் மஹபலியிடம் தன்னுடைய காலடியால் மூன்று அடி மண் தானமாகக் கேட்கிறான்.

மறுபடியும் கம்பன் இதோ

சிந்தையுவந்து எதிர் என் செய என்றான்
அந்தணன் மூவடி மண் அருள் உண்டேல்
வெந்திறல் இது வேண்டும் எனா முன்
தந்தனென் என்ற்னன் வெள்ளி தடுத்தான்.

மஹாபலி மூன்று அடி மண் தானமாகத் த்ந்தேன் என்று தன் கமண்டலத்திலிருந்து நீரை வாமனன் கையில் தாரையாக விடும் பொழுது அசுரகுருவான சுக்கிரன், வந்தவன் யார் என்று கூறி மஹாபலியை எச்சரித்து தடுக்கிறான். ஆனால் மஹாபலி பகவான் நாராயணனே தன்னிடம் வந்து தானம் கேட்கும் பொழுது அதை மறுக்கமாட்டேன் என்று

அடி ஒரு மூன்றும் நீ அளந்து கொள்க
எனநெடியவன் குறிய கை நீரில் நீட்டினான்.

இங்கு பெரியாழ்வார்

தக்கதிதுவன்றென்று தானம் விலக்கிய
சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய
சக்கரக் கையனே

என்று தானம் தடுத்த வெள்ளியின் ஒரு கண்ணை வாமனன் தர்ப்பையால் கிளறிப் பறித்ததாகச் சொல்கிறார்.

மஹாபலி கையில் நீரை வார்த்ததும் வாமனன் மிகப்பெரிய வடிவத்துடன் திருவிக்கிரமனாக வானமும் மண்ணும் அடைத்து வளர்கிறான். ஒரு திருவடி மண் முழுவதும் அளக்கிறது. மற்றொரு திருவடி வான் நோக்கி வளர்ந்து சந்திர, சூரிய மற்றும் நட்சத்திர மண்டலங்களைக் கடந்து பிரம்மனின் சத்திய லோகம் வரை செல்கிறது. அங்கு பிரம்மன் தன் கமண்டலத்திலிருந்து ஆகாய கங்கையால் திருவடி விளக்கிய நீர் திருவிக்கிரமனின் சிறு விரலை
மட்டுமே நனைக்கிறது. இதோ திருமங்கையாழ்வாரின் திருநெடுந்தாண்டகம் வாமனன் வளர்ந்த விதத்தை விவரிக்கிறது.

ஒண்மிதியில் புனல் உருவி ஒரு கால் நிற்ப
ஒரு காலும் அவுணன் உள்ளத்து
எண் மதியும் கடந்து அண்ட மீது போகி
இருவிசும்பினூடு போய் எழுந்து மேலைத்
தண் மதியும் கதிரவனும் தவிரவோடி
தாரகையின் புறம் தடவி அப்பால் மிக்கு
மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை
மலர் புரையும் திருவடி

இன்று விஞ்ஞானம் ஒப்புக்கொண்டுள்ள படி முதலில் சந்திர பின்பு சூரிய அதன் பின்பு நட்சத்திர மண்டலங்களை பெருமானின் திருவடி கடந்து சென்றதாக ஆழ்வார் கூறியிருப்பது ஆச்சரியத்தோடு அனுபவிக்கத்தக்கது.

என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன்
முன்னய வண்ணமே கொண்டளவாயென்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய
மின்னு முடியனே

மஹாபலியின் மகனான நமுசி பகவானை முந்தைய வடிவமான வமனனாக மூன்றடி மண் அளந்து கொள் என்கிறான். அவனை திருவிக்கிரமன் வானில் சுழற்றியெறிந்ததாக பெரியாழ்வார் ஒரு சம்பவத்தைக் கூறுகிறார்

திருவிக்கிரமன் தன்னுடைய மூன்றாவது அடியை மஹாபலியின் தலையில் வைத்து அவனை பாதாளத்திற்கு அழுத்தி அதன் அதிபதியாக ஆக்குகிறான்.

உரியது இந்திரர்க்கு இது என்று உலகம் ஈந்து போய்
விரி திரைப் பாற்கடல் பள்ளி மேவினான்

தான் தானமாகப் பெற்ற உலகம் முழுவதும் இந்திரனுக்கு அளித்து விட்டு பகவான் தன் திருப்பாற்கடலுக்கு திரும்பிச் செல்கிறான்.

இந்த அவதாரத்தை நம்மாழ்வார் அழகாக தன் திருவாசிரியத்தில் இவ்வாறு கொண்டாடுகிறார்.

மாமுதல் அடிப்போ தொன்றுகவிழ்த் தலர்த்தி,
மண்முழுதும் அகப்படுத்து, ஒண்சுடர் அடிப்போது
ஒன்றுவிண் செலீஇ, நான்முகப் புத்தேள்
நாடுவியந் துவப்ப, வானவர் முறைமுறை
வழிபட நெறீஇ, தாமரைக் காடு
மலர்க்கண் ணோடு கனிவா யுடையது மாய்
இரு நாயிறா யிரம்மலர்ந் தன்ன
கற்பகக் காவு பற்பல வன்ன
முடிதோ ளாயிரம் தழைத்த
நெடியோய்க் கல்லதும் அடியதோ வுலகே?

இந்த அவதாரம் பகவான் நாராயணனின் திருவடிகளின் பெருமையைப் பேசுவதாகவே ஆழ்வார்கள் கொண்டாடுகின்றனர்.

ஆண்டாள் ' அன்றிவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி' என்றும்

திருமங்கை மன்னன்

மன்னும் குறளுருவில் மாணியாய், - மாவலிதன்
பொன்னியலும் வேள்விக்கண் புக்கிருந்து, போர்வேந்தர்
மன்னை மனங்கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி,
என்னுடைய பாதத்தால் யானளப்ப மூவடிமண்,
மன்னா. தரு கென்று வாய்திறப்ப, - மற்றவனும்
என்னால் தரப்பட்ட தென்றலுமே, அத்துணைக்கண்
மின்னார் மணிமுடிபோய் விண்தடவ, மேலெடுத்த
பொன்னார் கனைகழற்கால் ஏழுலகும் போய்க்கடந்து,அங்
கொன்னா அசுரர் துளங்கச் செலநீட்டி,
மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்து,
தன்னுலகம் ஆக்குவித்த தாளானை

என்றும் அவன் திருவடிகளையே பாடுகிறார்கள்.

இந்த முழு சரித்திரமும் மிக அழகாக மேலே காண்கின்ற சிற்பமாக திருக்குறுங்குடியில் கல்லில் உறைந்திருக்கிறது. பகவானின் ஊன்றிய திருவடி பூமியைப் பிளந்து கீழே சென்றிருக்கிறது. தூக்கிய திருவடியை பிரம்மன் தன் கமண்டல நீரால் அலம்பிக்கொண்டிருக்கிறான். மிக அழகான சிற்பம்.

Sunday, December 18, 2005

என்னுடைய இன்னொரு ரங்கோலி


இந்த ரங்கோலி 2 வருடங்களுக்கு முன் நவராதிரிக்கு போடப்பட்டது. விமரிசனங்கள் வரவேற்கிறேன்.

Friday, December 16, 2005

மார்கழித்திங்கள்


மார்கழித்திங்கள் மதி நிறைந்த ந்ன்னாளால்
நீராடப்போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல்கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்தகண்ணி யசோதையிளம்சிங்கம்
கார்மேனிச்செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்

நாரயணனே நமக்கே பறைதருவான்
பாரோர்புகழப் படிந்தேலோரெம்பாவாய்.

இன்று மார்கழி மாதம் ஆரம்பித்து விட்டது. மேலே உள்ள ஆண்டாள் படம் என்னுடைய தாத்தா காலத்திலிருந்து என் வீட்டில் திருவாராதனத்தில் இருக்கிறது. சுமார் 80 வருட பழமையான படம் என்று நினைக்கிறேன். இந்தப் படத்தை இந்த மார்கழியில் இங்கு பதிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது